கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணம்
கிழக்கு உக்ரைன்(eastern Ukraine) நகரமான டினிப்ரோவில்(Dnipro) ரஷ்யா(Russia) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“நாற்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன” என்று டினிப்ரோ பிராந்திய ஆளுநர் விளாடிஸ்லாவ் கெய்வனென்கோ(Vladyslav Gaivanenko) குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்(Steve Witkoff) மாஸ்கோவில்(Moscow) ஜனாதிபதி விளாடிமிர் புடினை(Vladimir Putin) சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு நாளுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
உக்ரைனின் நான்காவது பெரிய நகரமான டினிப்ரோ, போருக்கு முந்தைய 968,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. உக்ரைனின் முன்னணிப் பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால் வழக்கமான ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.





