இலங்கையில் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ள 22.4 வீதமான மாணவர்கள்

இலங்கையில் 22.4 வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் உளநல இயக்குநரக குழாமின் பதில் பணிப்பாளர், விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில், இலங்கையில் ஒரு பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேலும் எங்கள் பிள்ளைகளின் தரவுகளைப் பார்க்கும்போது, 22.4 வீதமான பிள்ளைகள் தனிமையால் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
13-17 வயதுடைய இந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 11.9 வீதமானோர் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதால் இரவில் தூங்குவதில் சிரமப்படுவதாகக் கூறினர்.
சுமார் 18 வீதமானோர் மனச்சோர்வின் அறிகுறிகளைக் காட்டினர். 7.5 வீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை இல்லையெனவும் குறிப்பிட்டார்.
25 வீத பிள்ளைகள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகக் கூறினர். அதாவது 75 வீதமான பிள்ளைகளுக்கு அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் இல்லை எனவும் தெரிவித்தார்.