லக்னோவில் இணைய விளையாட்டு மோகத்தால் தாயை கொன்ற 20 வயது இளைஞன்
லக்னோவில் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான 20 வயது இளைஞன் ஒருவர், விளையாட்டில் ஏற்பட்ட கடனை அடைக்க வீட்டில் நகைகளைத் திருடிய போது பிடிபட்டதால் தனது 45 வயது தாயை கொலை செய்துள்ளார்.
நிகில் யாதவ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, தானும் தனது தாயாரும் தங்கள் வீட்டில் நடந்த கொள்ளையின் போது தாக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது குடும்பத்துடன் கல்லி பகுதியில் வசித்து வந்த நிகில், இணைய விளையாட்டில் அடிமையாகி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.
இழந்த பணத்தை திருப்பிச் செலுத்த, அவர் M Pokket, Flash Wallet, RAM Fincorp போன்ற தளங்கள் மூலம் கடன்களை வாங்கி சிக்கிக்கொண்டார்.
இந்நிலையில், கடனை செலுத்துவதற்காக வீட்டில் நகைகளை எடுத்துச் செல்லும் போது தாயார் ரேஷ்மா யாதவ் அவரை பிடித்துள்ளார். இதன் போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் தாயை அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் தனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து தன்னையும் தனது தாயையும் தாக்கியதாக ஒரு பொய்யான கதையை உருவாக்கியுள்ளார்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, பயத்தில் தாயை கொலை செய்ததாக நிகில் ஒப்புக்கொண்டுள்ளார்.





