இந்தோனேசியாவில் குவாரி இடிந்து விழுந்ததில் 13 தொழிலாளர்கள் பலி

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன.
இந்தச் சமபவத்தில் 13 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லையென மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.