அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வால்மார்ட் கடையில் நடந்த கத்திக்குத்தில் 11 பேர் காயம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வால்மார்ட் பகுதிவாரிக் கடையொன்றில் ஏற்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். சம்பவம் சனிக்கிழமை (ஜூலை 26) டிரேவெர்ஸ் நகரில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமுற்றவர்களுக்கு மன்சன் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசரகாலப் பிரிவில் வழக்கத்தைவிட அதிகமானோர் இருப்பதாக நிலையம் சொன்னது. மூவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
சம்பவத்தைத் தொடர்ந்து வால்மார்ட்டிற்குக் காவல்துறையின் பல வாகனங்களும் அவசர மருத்துவ உதவி வாகனங்களும் விரைந்தன.சம்பவம் குறித்த புலன்விசாரணை நடைபெறுகிறது.
சந்தேக நபர் மிச்சிகன்வாசி என்றும் அவர் மடக்குக் கத்தி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறைத் துணை இயக்குநர் டான் பொங்கினோ உள்ளூர் அதிகாரிகளுக்கு மத்தியிலிருந்து உதவிகள் நல்கப்படுவதாகக் கூறினார்.
கத்திக்குத்துச் சம்பவம் குறித்துச் சட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர் தெரிவித்தார். இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் சமூகத்தினரையும் எண்ணிப் பார்ப்பதாக அவர் சொன்னார்.
டெட்ரோய்ட் நகரிலிருந்து ஏறக்குறைய 410 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது டிரேவெர்ஸ் நகரம்