சுதந்திர தின விழாவுக்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
சுதந்திர தின விழா “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு நடைபெறும்.
இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்றது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சுதந்திர தின விழாவுக்காக 100 மில்லியன் ரூபா வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த செலவில் சுதந்திர தினத்துக்குரிய கம்பீரத்தன்மை குறையாமல் அதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சின் செயலாளரால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.
கடந்த முறை சுதந்திர தின விழாவுக்கு 69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனவே, இம்முறையும் அந்த செலவுக்குள் நிகழ்வை நடத்தலாம் எனவும் கூறப்பட்டது.
கொழும்பிலுள்ள தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.





