இலங்கை மக்கள் தொகையில் 10% பேருக்கு சிறுநீரக நோய் – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை
இலங்கை மக்கள் தொகையில் பத்து சதவீதம் (10%) பேருக்குச் சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாகவும், பதினைந்து சதவீதம் (15%) வரையான முதியவர்களுக்கு சிறுநீரக நோய் இருக்கக்கூடும் எனவும் மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் வைத்தியர் அனுபாமா டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே போது இவ்வாறு கூறியுள்ளார்.
சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்குச் சிறந்த தீர்வு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறுநீரக நோய்க்கான விசேட வசதிகளைக் கொண்ட கொழும்பு மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் மட்டுமே இது குறித்து அறிந்துள்ளனர்.
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகப் பலர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நச்சு உணவுகளை உட்கொள்வது, அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது, தசைகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வைட்டமின்கள் மற்றும் அதிக மருந்துகள் பயன்பாடு காரணமாகவும் கணிசமான எண்ணிக்கையிலானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை மூலம் நோய் இருக்கிறதா என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை உடனடியாக ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




