திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 1 வயது 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
திருகோணமலையின் ஷாபி நகர்(Shabi Nagar) பகுதியில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் மூதூர்(Mudur) காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது.
மாவிலாறு(Mavilaru ) அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக மூதூர் பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியது.
இந்நிலையில் குறித்த வீட்டுக்கு அருகில் நீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் பூ மரங்கள் தானாகவே முளைத்தன.
குறித்த குழந்தை பூப்பறிப்பதற்காக நீர் நிரம்பிய பள்ளத்தை நோக்கி சென்ற வேளை தவறுதலாக விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை மூதூர் ஷாபிநகர் பகுதியைச் சேர்ந்த சபான்(Saban) என்பவருடைய ஒரு வயது 8 மாத குழந்தையான அலியா மர்யம்(Aliya Maryam) என தெரியவந்துள்ளது.
குறித்த குழந்தை நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தமையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.





