இலங்கையில் வீதி விபத்து – வெளிநாட்டு பெண் பலி

இலங்கையில் சம்பவித்த விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பெல்வெஹர பகுதியில், தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற வாகனம் ஒன்று கடை ஒன்றின் முன்பாக நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பியது.
அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டி அந்த வாகனத்துடன் மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பிய போது எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டு ஆண்களும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்ததுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 54 வயதுடைய நெதர்லாந்து பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது .