இலங்கையில் தேடப்படும் பெண் தொடர்பில் போலியான தகவல்

இலங்கையில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கடந்த 20 நாட்களாக பொலிஸாரினால் தேடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (10) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி குறித்து பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.