ஜெர்மனியில் தங்க நாணயத்திற்கு காத்திருந்த பெண் – பொதியில் கிடைத்த பழைய வெள்ளரிக்காய்
ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தின் பிர்க்லாண்டைச் சேர்ந்த ஒரு பெண், இணைய மோசடி ஒன்றில் 3,300 யூரோக்களை இழந்துள்ளார்.
குறித்த பெண், ஒரு வலைத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தங்க நாணயத்தை வாங்க முயற்சித்தபோது, இறுதியில் வெள்ளரிக்காய் ஒன்றையே பெற்றுள்ளார்.
மோசடியைத் தவிர்க்க, விநியோகத்தின் பின்னர் பணம் செலுத்தும் முறையை அவர் தேர்வு செய்தார். மேலும், பணம் செலுத்துவதற்கு முன்பு பொதியைச் சரிபார்க்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
எனினும், பொதி வந்தபோது, அந்தப் பெண் வீட்டில் இருக்கவில்லை. அவரது தந்தை அதை ஏற்றுக்கொண்டு, சரிபார்க்காமல் 3,300 யூரோக்களைச் செலுத்தியுள்ளார்.
அன்று மாலை, அந்தப் பெண் பொதியைத் திறந்தபோது, தங்க நாணயத்திற்குப் பதிலாக ஒரு பழைய வெள்ளரிக்காயைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடளித்தபோது, விற்பனையாளர் ஒரு போலி நபர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பொருள், மோசடி செய்பவரைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
இந்நிலையில், இணையத்தில் கொள்முதல் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்கவும், பணம் செலுத்துவதற்கு முன்பு பொதிகளை சரிபார்க்கவும், வகைப்படுத்தப்பட்ட வலைத்தளங்களில் தெரியாத விற்பனையாளர்களை நம்புவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கின்றனர்.





