பேரிடருக்கு மத்தியிலும் புலிப்புராணம் பாடும் விமல்!
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளின் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கக்கூடும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுவரும் சர்வதேச உதவிகள் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,
“அநுரகுமார திஸாநாயக்கவால்தான் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அமெரிக்க இராஜதந்திரிகள் நற்சான்றிதழ் வழங்கிவரும் நிலையே தற்போது காணப்படுகின்றது.
புலிகளை தோற்கடித்து, 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவருக்குகூட இவ்வாறு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவில்லை.
ஆனால் இடதுசாரி ஆட்சியை முன்னெடுக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்படுகின்றது. இதன் பின்புலம் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை மீண்டெழுவதற்கு பில்லியன் கணக்கில் நிதி தேவைப்படும்போது ஓரிரு மில்லியன்களை உதவியாக பெற்று மீள முடியுமா?
சர்வதேச உதவிகள் இலவசமாகக் கிடைக்கப்பெறுவதில்லை. அதன் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கக்கூடும்.” என்றார் விமல் வீரவன்ச.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் பிரதான பங்காளிக்கட்சிதான் ஜே.வி.பி. என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியாகும்.
அக்கட்சி ஊடாகவே விமல்வீரவன்சவின் அரசியல் பயணம் ஆரம்பமானது. எனினும், பல குற்றச்சாட்டுகள் காரணமாக அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக அவர் மஹிந்த தரப்புடன் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார். கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
வழமையாக அமெரிக்கா மற்றும் இந்தியாவை கடுமையாக விமர்சித்துவரும் அரசியல் போக்கையே அவர் பின்பற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





