கர்நாடகாவில் பழிவாங்கும் நோக்கில் ஐந்து புலிகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற கிராமவாசி

கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலை வன விலங்குகள் சரணாலயத்தில் தாய்ப்புலியும் நான்கு குட்டிகளும் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்டுப் பழிவாங்கும் செயல் என காவல்துறை தெரிவித்தது.
மாதேஸ்வரன் மலையில் மீன்யம் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஐந்து புலிகள் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனது, வனத்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சுற்றுக்காவலில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும்போது புலிகள் இறந்து கிடப்பதைக்கண்டு உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த யாரேனும், இறைச்சியில் நஞ்சு கலந்து புலிகளைக் கொன்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், புலியால் தனது பசுமாடு கொல்லப்பட்டதை அடுத்து, பழிவாங்கும் நோக்கில் சரணாலயத்தில் இருந்த ஐந்து புலிகளுக்கும் நஞ்சு கொடுத்து கொன்றுள்ளார்.
பசுமாட்டின் உரிமையாளரது மகன்தான் இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார்.கொல்லப்பட்ட பசுவின் இறைச்சியில் பூச்சிக்கொல்லி மருந்தைப் பூசிய பின்னர், புலிகளுக்கு அதைக் கொடுத்தார்.உடற்கூராய்வின்போது, தாய்ப்புலியும் குட்டிகளும் நஞ்சு உட்கொண்டதால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.