வங்கதேசத்தில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் :எச்சரிக்கை உணர்வில் இந்தியா,மியான்மர்

பங்ளாதேஷில் இந்தியா, மியன்மார் எல்லை அருகே அமைந்துள்ள சிட்டகாங்கில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளது.
இது இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. சிட்டகாங் பகுதிக்கு அமெரிக்க விமானமான சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் வந்து சென்றிருப்பது வங்காள விரிகுடா கடல் பகுதியில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பும் செல்வாக்கும் அதிகரித்து வருவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
மியான்மாரின் தீவிரவாத அரசு எதிர்ப்புக் குழுக்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவும் சீனாவும் முயற்சி செய்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பங்ளாதேஷில் பெரிய அளவில் இடம்பெற்ற போராட்டத்துக்குப் பின்னர் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டே வெளியேறினார். இந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் அமெரிக்காவுக்குப் பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்ததாலேயே அமெரிக்கா தனது அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாகவும் ஹசீனா குற்றஞ்சாட்டி இருந்தார்.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஆட்சிப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் கூட்டு ராணுவ ஒத்திகை போன்றவற்றுக்காக அமெரிக்க ராணுவம் அடிக்கடி சிட்டகாங் வந்துசெல்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவும் பங்ளாதேஷும் இணைந்து ‘ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல்-25’, ‘டைகர் லைட்னிங்-2025’ ஆகிய ராணுவப் பயிற்சிகளைச் சிட்டகாங்கில் நடத்தின. கடந்த வாரம் அமெரிக்காவின் இன்னொரு சிறப்புப் படை சிட்டகாங் பகுதிக்கு வந்திறங்கியிருப்பது மற்றொரு கூட்டுப் பயிற்சிக்காக என்று கூறப்படுகிறது.