“கிறிஸ்தவர்களைக் கொல்பவர்களுக்கு இதுவே பாடம்”: ஐஎஸ் அமைப்பிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதக் குழுவினர் மீது அமெரிக்க இராணுவம் மிக சக்திவாய்ந்த மற்றும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினமான நேற்று (டிசம்பர் 25) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்ததற்கான பதிலடியாகவே இந்தத் தாக்குதல் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையின் கீழ், தீவிரவாதத்தை வளர விடமாட்டோம் என்றும், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் மேலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), இந்த நடவடிக்கை நைஜீரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், நைஜீரிய அரசாங்கம் இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக கிறிஸ்தவர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டை “குறிப்பாகக் கவலைப்பட வேண்டிய நாடு” (Country of Particular Concern) என ஏற்கனவே அமெரிக்கா பட்டியலிட்டிருந்த நிலையில், இந்த நேரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





