கரூரில் நெரிசல் நடந்த இடத்தை பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மேலும், கரூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், “இந்த சம்பவம் மனதை உருக்குகிறது. யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்து, முறையான விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும்,“பிரதமர் மோடி எங்களை ஆறுதல் கூற அனுப்பினார். அவர் நேரில் வர விரும்பினாலும், சூழல் காரணமாக வர முடியவில்லை. அழும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.”
”பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் நிவாரண உதவி வரவு வைக்கப்படும் என்றும், யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை எனவும் இனிமேல் தமிழ்நாடு மட்டுமல்ல, நம்நாட்டில் இதுபோல் எங்கும் நடக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.





