சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு: நாளை நாடு தழுவிய ரீதியில் 2 நிமிட மௌன அஞ்சலி
நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
35,000-இற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரழிவையும், அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் பிரதான நினைவு நிகழ்வு காலி, பெரலிய சுனாமி நினைவிடத்திற்கு அருகில் நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல், உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், நாளை முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக நிலவும் தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, இம்முறை மாவட்ட ரீதியில் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கவும் அனர்த்த மேலாண்மை மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.





