இந்தோனேசியாவில் அரசின் இலவச உணவு திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டமே உணவு விஷமானதற்கு பிரதான காரணம் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என விமர்சகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய BGN நிறுவனத்தின் தலைவரான தாதன் ஹிந்தயானா (Dadan Hindayana) இந்தோனேசியா முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 600 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட 441 உணவு விஷ சம்பவங்களில், “இலவச உணவுத் திட்டம் 211 சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலவச உணவுத் திட்டத்துடன் தொடர்புடைய உணவு விஷ வழக்குகளில் பாதி ஈ கோலி மாசுபாட்டின் விளைவாகும் என்று தாதன் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 14,000 க்கும் மேற்பட்ட சமையலறைகள் இயங்கி வருகின்றன. அத்துடன் நவம்பர் வரை 42 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மத்திய ஜாவாவில் உள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 660 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசாங்கம் வழங்கிய உணவை சாப்பிட்ட பிறகு சுகவீனம் அடைந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.




