தாய்லாந்து கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொள்வதாக கம்போடியா குற்றச்சாட்டு
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ளது.
தாய்லாந்து விமானப்படை, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கம்போடியாவின் இராணுவ நிலைகளின் மீது இன்று வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பிறகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.
ஆனால் கம்போடியா பாதுகாப்பு அமைச்சகம், தாய்லாந்து பொதுமக்களின் வீடுகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்போது பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் மோதல் வெடித்தது.
இதுவரை சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
மோதல் தற்போது 800 கிலோமீற்றர் நீளமான எல்லைப் பகுதியின் பெரும்பாலான மாகாணங்களில் தொடர்கிறது.
கம்போடியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்டே மேஞ்சே மாகாணத்தில் தாய்லாந்து F-16 போர் விமானங்கள் மூலம் சுமார் 40 குண்டுகள் வீசப்பட்டதாக கம்போடியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாய்லாந்து இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாக கூறியுள்ளது.
இந்த நிலையில், எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தைகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன.
சனிக்கிழமை இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர்.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், இரு தரப்பும் உடன்பட்டால் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் சீனாவும் நடுவர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தாய்லாந்து–கம்போடியா எல்லை விவகாரம் நூற்றாண்டுக்கும் மேலான பழமையானது.
கடந்த மே மாதத்தில் ஒரு கம்போடியா சிப்பாய் உயிரிழந்ததையடுத்து, பதற்றம் அதிகரித்து, ஜூலை 24 அன்று கடுமையான போர் வெடித்தது. அந்த மோதலில் பல சிப்பாய்களும் பொதுமக்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





