‘செம்மணி குறித்து மறைக்க எதுமில்லை’ எனக் கூறிய இலங்கை ஜனாதிபதி: அதனை பார்வையிடாமலேயே கடந்து சென்றார்

வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை ஆய்வு செய்யாமலேயே கடந்து சென்றுள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பாக மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செப்டெம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 41ஆவது நாளான நேற்றைய தினம் (செப்டெம்பர் 2) நான்கு எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், கண்டறியப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை மொத்தமாக இதுவரை 206 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செம்மணி மனித புதைகுழி குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
“செம்மணி மனித புதைகுழி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளோம் எங்களிடம் மறைக்க எதுவுமில்லை.”
கசப்பான கடந்த காலத்தை ஏன் நினைவில் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசிய ஜனாதிபதி, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் வழியில் செம்மணி மனித புதைகுழியை ஆயு்வு செய்யாமலேயே கடந்து செல்வதை ஊடகவியலாளர்கள் காணொளி பதிவு செய்திருந்தனர்.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் அகழ்வாய்வுகள் முதல் முறையாக 2025 மே 15 அன்று ஆரம்பமானது.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், இதில் 28 சிறுவர்கள் உள்ளிட்ட 376 பேரின் மனித மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.