பிரித்தானியாவில் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது MI5 இரகசியக் கண்காணிப்பு
பிரித்தானியாவில் அரசியல் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்த இரகசியப் பொலிஸார், சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தகவல்களை அந்நாட்டு உளவுச் சேவையான MI5-இடம் தொடர்ச்சியாகக் கையளித்து வந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1960 முதல் 1990-களின் பிற்பகுதி வரை, இடதுசாரி குழுக்கள், இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவிய பொலிஸார், செயற்பாட்டாளர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
சுமார் 13 வயது சிறுவர்களின் அரசியல் கருத்துக்கள் முதல், தனிப்பட்ட வங்கி விபரங்கள் வரை MI5-இடம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரச பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அரசியல் பின்னணியைச் சோதிக்கவும், ஜனநாயகப் போராட்டங்களை முடக்கவும் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போதும் தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி குழுக்களை MI5 கண்காணித்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





