இஸ்ரேலின் செயலால் சோமாலியா முழுவதும் வெடித்த போராட்டங்கள்
சோமாலிலாந்தை இஸ்ரேல் உலகளவில் முதன்முறையாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, சோமாலியா முழுவதும் பரவலான போராட்டங்கள் வெடித்துள்ளன.
தலைநகர் மொகடிஷு (Mogadishu) உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மொகடிஷுவின் முக்கிய கால்பந்து மைதானம் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை,மக்கள் திரண்டனர்.
போராட்டக்காரர்கள் சோமாலிய கொடிகளை ஏந்தியும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பினர்.
பைடோவா, துசமரெப், லாஸ் அனோட், ஹோபியோ உள்ளிட்ட நகரங்களிலும், நாட்டின் வடகிழக்கு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்தான்புல் சென்றுள்ள நிலையில் இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சோமாலியா மற்றும் துருக்கி இடையே நெருங்கிய அரசியல், பாதுகாப்பு உறவுகள் உள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சோமாலிலாந்தின் போரமா நகரத்திலும் சிறிய அளவிலான எதிர்ப்பு கூட்டங்கள் நடைபெற்றன. 1991 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பின்னர்
சோமாலிலாந்து தனிப்பட்ட முறையில் சுதந்திரம் அறிவித்திருந்தாலும், இதுவரை சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை, சோமாலிலாந்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் மாறியது.
இந்த முடிவு செங்கடல் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சோமாலிய அரசு கண்டித்துள்ளது.
இதனிடையே, தேசிய ஆலோசனைக் குழு இந்த அங்கீகாரத்தை “சட்டவிரோதமானது” என்றும், பிராந்திய அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் தெரிவித்துள்ளது.
பல கூட்டாட்சி மாநிலங்களும் இதை கண்டித்து ஒருங்கிணைந்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.





