புதிய அரசமைப்பு ஊடாக தமிழருக்கு தீர்வு! நீதி அமைச்சர் உறுதி!!
புதிய அரசமைப்பு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார்.
புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பூர்வாங்க பணி இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.
புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ் நாளிதழொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ புதிய அரசமைப்பு இயற்றப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பில் தற்போது மக்களிடம் கருத்து கோரப்பட்டுவருகின்றது.
புதிய சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.
புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு காணப்படும்.”எனவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக வரவுள்ள சட்டம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை பொதுமக்கள் கருத்துகளை முன்வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





