விக்டோரியா – சீனா இடையே புதிய விமான சேவை ஆரம்பம்
விக்டோரியாவின் சுற்றுலாத் துறை மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சீனாவுடனான புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஷென்சென் ஏர்லைன்ஸ் (Shenzhen Airlines) நிறுவனத்தின் முதல் நேரடி விமானம் மெல்பேர்ண் விமான நிலையத்தை வந்தடைந்தது.
வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் இந்த புதிய விமான சேவை மூலம், ஆண்டுக்கு 95,000-க்கும் மேற்பட்ட கூடுதல் சுற்றுலாப் பயணிகள் விக்டோரியாவிற்கு வருகை தருவார்கள் என மாநில அரசு கணித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கொலின் ப்ரூக்ஸ், இந்தப் புதிய பாதை ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்குப் பெரும் வருவாயை ஈட்டித் தரும் எனத் தெரிவித்தார்.
விக்டோரியாவின் மிக முக்கியமான சுற்றுலா சந்தையாக சீனா உருவெடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, 4 லட்சத்து 53 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் மூலம் மாநிலத்திற்கு 3.1 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகமாகும்.
சுற்றுலாத் துறையில் சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், இத்தகைய நேரடி விமான இணைப்புகள் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதோடு, சர்வதேச சந்தையில் விக்டோரியாவை ஒரு முக்கிய இடமாகத் தக்கவைக்கும் என அமைச்சர் ஸ்டீவ் டிமோபௌலோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





