பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த டெல்லியில் சஜித் முக்கியக் கலந்துரையாடல்
																																		இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும்.

இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் என்றும், இலங்கையின் மறுசீரமைப்புக்குப் பிந்தைய மீட்சியில் பெரும் பங்கை ஆற்றுவதற்கு இந்திய தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
விவசாய பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், இலங்கை ஏற்றுமதி சபைக்கும் , இந்திய தொழிற்துறை வலையமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை – இந்திய தொழில்துறை கூட்டமைப் வர்த்தக மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு வணிக முயற்சி பிரதிநிதிகள் குழவினரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
        



                        
                            
