ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் : வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை!
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையும் இந்தியாவும் வாக்களிக்கவில்லை.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி “உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு” என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம், சமர்பிக்கப்பட்டது.
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை இதை ஏற்றுக்கொண்டது, 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில், 51 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவும் வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளில் அடங்கும்.
சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி ஒரு நியாயமான, விரிவான மற்றும் நிலையான அமைதியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இந்தத் தீர்மானம் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
போரில் ஈடுபட்ட அனைத்து போர்க் கைதிகளையும் முழுமையாகப் பரிமாறிக் கொள்ளவும், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவிக்கவும் இந்தத் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.





