உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க தயார் – ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர முயற்சித்ததால் கோபம் அடைந்த புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போட்ட புதினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் அளித்ததால், ரஷ்யாவை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. போர் தொடர்ந்து நீடித்து வருவதால் சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.
மேலும் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கியை அடுத்தடுத்து சந்தித்தார். எனினும், இந்த பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஜெலன்ஸ்கியை சந்திக்க தயார் என்று புதின் அறிவித்துள்ளார். ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் அவரை சந்திக்கத் தயாராகவே உள்ளதாக தெரிவித்துள்ள புதின், “உண்மையான கேள்வி என்னவென்றால் இந்த சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருக்குமா என்பது தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.