மத்திய பிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளைக் கடித்துக் குதறிய எலிகள்

மருத்துவமனையில் சுற்றித்திரிந்த எலிகள், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரு பச்சிளங் குழந்தைகளைக் கடித்துக் குதறிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள இந்தூர் நகரில் மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அம்மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு என சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது.
அங்கு அண்மையில் பிறந்த இரு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தைகளை எலிகள் கடித்துக் குதறியது தெரிய வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆகப்பெரிய மருத்துவமனை எனப் பெயர் வாங்கியுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கண்டிப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் யாதவ் கூறியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததும், குழந்தைகளை வேறு பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாகவும் எலிப் பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.