ரணில், சஜித் இணைந்தால் வெற்றி நிச்சயம்: நவீன் நம்பிக்கை
“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.
முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இரு தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்க வரவேண்டும்.
கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதில் பிரச்சினை கிடையாது. ஏனெனில் அவர்களுக்குதான் ஆதரவு தளம் அதிகமாக உள்ளது. இந்த உண்மையை ஏற்க வேண்டும்.
கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் செயல்பட வேண்டும். கட்சி ஆதரவாளர்களின் மனநிலையை ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது புரிந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் எமக்கு பயணிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்தால் வெற்றயை நோக்கி பயணிக்க முடியும்.” – என நவீன் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.





