சிறு கட்சிகளுக்கு ரவி வலை!
ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (24) ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) பங்கேற்றிருந்தார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியில் இருந்து விலகுகின்றாரா அல்லது இல்லையா என்பது முக்கியம் அல்ல. அவரும், சஜித்தும் இணைந்து செயல்பட வேண்டியதுதான் முக்கியம்.
ஒன்றிணைவுக்காகவே நானும் பாடுபட்டுவருகின்றேன். எனினும், அதனை நான் வெளியில் காட்டிக்கொண்டு பிரச்சாரம் தேடவில்லை.
அதேபோல சிறு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்த பின்னர் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சிறப்பான ஆரம்பம் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது.” – என்றார் ரவி கருணாநாயக்க.





