நுகேகொடை பேரணி குறித்து ராஜித அதிருப்தி – பங்கேற்பது பற்றி இறுதி முடிவில்லை!
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று தேர்வு இருக்க வேண்டும். மாறாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் பயணிக்க தொடங்கினால் அது பிரச்சினைக்கே வழிவகுக்க வேண்டும்.
மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொது எதிரணியொன்று கட்டியெழுப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.” என ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.





