ஐ.எப் தமிழ் ஊடக வலையமைப்பினால் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான “நொச்சிக்குளம் அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை உபகரண பொருட்களும், மதியநேர போசனையும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ். புலேந்திரதாஸ் தலைமையில் இந்நிகழ்வு இன்று (19) இடம் பெற்றது.
ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பாரிய கொடிய நோய் மற்றும் மோசமான அரசியல் காரணங்களால் நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியானது.
நாட்டில் முன்றில் ஒருவருக்கு மூன்று வேளைக்குமான உணவு கிடைக்காத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. பாடசாலைகளில் கல்வி நிலை பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
இதையடுத்து, குறைவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கும் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது.
இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் பின் தங்கிய பாடசாலைகளில் மிகவும் முக்கியமான பாடசாலையாக நொச்சிக்குளம் அரசினர் கலவன் பாடசாலை காணப்படுகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் விவசாயத்தில் பாரிய வீழ்ச்சியை கண்டனர்.
இதேவேளை, மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக முயற்சித்த போதிலும் ஊக்கப்படுத்துவதற்கு யாரும் முன்வராத நிலை காணப்பட்டது.
பாரிய சவால்களுக்கு மத்தியிலும் கடந்த வருடம் பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சிறந்த பெறுப்பேறுகளைப் பெற்று மாணவர்கள் சாதனை படைத்திருந்தனர். அவ்வாறான சாதனை மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இதே நேரம் மாகாண மட்டத்தில் குண்டெறிதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் வீ.ஹம்ஸாத் என்பவருக்கு ஊக்குவிப்புத் தொகையாக பண பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதே நேரம் மாணவர்கள் தமது சந்தோஷத்தை பாடல்கள் மற்றும் நடனம் மூலம் வெளிப்படுத்தினர்.
ஆனாலும் இன்றைய தினம் நீங்கள் எங்களை மகிழ்வித்தீர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்” எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.