பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: இஸ்ரேல் நாடாளுமன்றில் மோடி வலியுறுத்து!
” தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. இது விடயத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.’’ இந்திய பிரதமர் மோடி Narendra Modi திட்டவட்டமாக தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ தீவிரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது. ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்கிறேன்.
மும்பை தீவிரவாத தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலும் ஒன்றுதான். பொதுமக்களை கொல்வதை நியாப்படுத்த முடியாது.
தீவிரவாதம் அமைதியைக் கெடுக்கிறது. சமூகத்தை அழிப்பதுதான் தீவிரவாதத்தின் நோக்கம். தீவிரவாதத்தில் இரட்டை நிலை இருக்க முடியாது.
தீவிரவாத விடயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. இப்பகுதியில் நிலையான அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது.” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளது. அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது.
இந்தியாவில் யூதர்கள் அச்சமின்றி வசிக்கின்றனர். இந்தியா யூதர்களின் தாய்நாடாக உள்ளது. நமது உறவு ரத்தம் மற்றும் தியாகத்தால் எழுதப்பட்டுள்ளது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியாவும் – இஸ்ரேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து தற்போது அரசு முறைப் பயணம் சென்றுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவீர் மிலே உட்பட சிலர் மட்டுமே உரை நிகழ்த்தியுள்ளனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய அரசியல் தலைவர் பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.





