மஹிந்தவின் “சலூன் கதவை” மூடிய நாமல்!
“எனது தந்தையின் காலத்தில் இருந்த சலூன் கதவு தற்போது மூடப்பட்டுவிட்டது. இனி கொள்கையுடன் ஒத்துப்போகின்றவர்களுக்கு மாத்திரமே கட்சி கதவு திறக்கப்படும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாற்று கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குள் வளைத்துபோடப்பட்டனர்.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் ரீதியில் கோலோச்சியது.
மறுபுறத்தில் இது தொடர்பில் விமர்சனங்களும் எழுந்தன. கட்சி தாவும் அரசியல் கலாசாரத்துக்கு மஹிந்த களம் அமைத்துவிட்டார் எனவும் விமர்சிக்கப்பட்டது.
இது தொடர்பில் மஹிந்தவிடம் வினவப்படும்போது தனது கட்சியில் கதவு சலூன் கதவை போன்றது, எவர் வேண்டுமானாலும் வரலாம் எனக் கூறுவார்.
இதனால் அரசியல் களத்தில் மஹிந்தவின் சலூன் கதவு என்ற வசனம் ஹிட்டானது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் வந்தால் கதவு திறக்கப்படுமா என நாமல் ராஜபக்சவிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “ நாம் சலூன் கதவை மூடிவிட்டோம். எனது தந்தையின் அரசியல் வேறு, தற்போதைய அரசியல் வேறு. இனி கொள்கையுடன் செயல்படக்கூடியவர்கள் வரலாம்.” – என்றார்.





