மத்திய கிழக்கு மோதல் – இலங்கையில் ஒகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

இலங்கையில் ஒகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலின் நேரடி விளைவாக உலக சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர், மேலும் உலகளாவிய விநியோகத்தில் சுமார் 3 சதவீதத்தை கொண்டுள்ளது.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருள் பெற்று வருகின்றது.
இதனை தவிர, எரிபொருள் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் 4வது நாளை எட்டியதால், வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.5 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு 75 அமெரிக்க டொலர்களை எட்டியது.
அதே நேரத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் 0.7 சதவீதம் உயர்ந்து 73.42 டொலராக இருந்தது. பிரெண்ட் பின்னர் 0.5 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு 73.78 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இந்த நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் இது உடனடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.
“ஜுன் மாத இறுதியில் உள்நாட்டில் விலைகள் திருத்தப்படும்போது, அது ஒரு பிரச்சனையாக இருக்காது. தற்போது முந்தைய விலையில் ஓர்டர் செய்யப்பட்ட சரக்குகளை நாங்கள் பெற்று வருகிறோம். அடுத்து ஓர்டர் செய்ய வேண்டிய சரக்குகளுக்கு மட்டுமே விலை உயர்வு பொருந்தும்.
இலங்கை செலவுகளை பிரதிபலிக்கும் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்திய நாடாகும். சர்வதேச சந்தையில் ஏற்படும் எந்தவொரு ஏற்றமும், உள்ளூர் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.