ஆசிய கோப்பையில் குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யுஏஇ அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யுஏஇ அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் 2.1 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் – 4 ரன்கள் 5 விக்கெட்டுகள்
2. குல்தீப் யாதவ் – 7 ரன்கள் 4 விக்கெட்டுகள்
3. ஷதாப் கான் – 8 ரன்கள் 4 விக்கெட்டுகள்
4. முகமது நபி – 17 ரன்கள் 4 விக்கெட்டுகள்
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 30 ரன்னில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 20 ரன்களுடனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.