கனடா துப்பாக்கி சூட்டில் யாழ் யுவதி உயிரிழப்பு; வெளியான பகீர் காரணம்

கடந்த 7 ஆம் திகதி கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொழில்போட்டி காரணமாக இக் கொலை சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமயனுக்கு வைத்த இலக்கிலேயே தங்கை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொலை சம்பவத்திற்கான காரணத்தை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சோலஸ் ரோட் பகுதியின் கேஸ்டில்மோர் அவென்யூ மற்றும் ஸ்வான் பார்க் ரோட் அருகே இந்த வீடு அமைந்துள்ளது.
பொலிஸார் சென்றபோது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் , சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயையும் கண்டுள்ளனர்.
இதனையடுத்து உடனே இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் 20 வயதான மார்க்கம் பகுதியைச் சேர்ந்த யுவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பொலிஸார் கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தாலும், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இந்த வீடு பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றவாளிகள் திட்டமிட்டு இந்த வீட்டிற்கு வந்து இந்த கொடூரச் செயல்களைச் செய்துள்ளனர். இதுவே ஒரு இலக்கு தாக்குதல் என்பதற்கு இது சான்றாகும், என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் ஆனது கனடாவாழ் தமிழர்களிடையே பேரதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.