ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகரம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/jaffna-01-jpg.webp)
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்கள் நடமாட்டம் அங்காங்கே காணப்பட்டாலும் வழமையான நிலையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.