மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு

வறண்ட வானிலை காரணமாக பல அனல் மின் நிலையங்கள் இயங்குவதால் மின்சார உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன இன்று (25) தெரிவித்தார்.
இந்த நாட்களில் பகலில் 20 சதவீத மின்சாரமும், இரவில் 40 சதவீத மின்சாரமும் நீர் மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
கனமழை பெய்யும் போது அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு, முடிந்தவரை நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், இந்த நேரத்தில் கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சார சபை இதை எதிர்பார்த்து தேவையான திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும், இது எதிர்காலத்தில் நிர்வாகத்தை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார்.
மழைக்காலங்களில் இலங்கை மின்சார சபை அதன் மின்சாரத் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரத்தை நீரில் இருந்து உற்பத்தி செய்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.