ஆங்கில பாடபுத்தகத்தில் முறையற்ற குறிப்பு: பின்னணியில் ராஜபக்சக்களா?
“தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி விசாரணை அவசியம்.
கல்வி அமைச்சின் செயலாளர் சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த புத்தகத்தை எதிரணியா அச்சிட்டது? சிலவேளை, ராஜபக்சக்கள்தான் இதனை அச்சிட்டனர், இதன் பின்னணியில் நாமல் உள்ளார் என்றுகூட கூறப்படலாம்.
எனவே, நகைச்சுவைத்தனத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். எமது நாட்டுக்கு தேவையற்ற கலாசாரம் தேவையில்லை. எமது நாட்டுக்கு பொருத்தமற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.” – என்றார் நாமல் ராஜபக்ச.
அதேவேளை, கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன.
தரம் 6 ஆங்கில பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறானது தற்போது இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கல்வி அமைச்சின் செயலாளரும் முறைப்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





