“அமைதிக்கான தலைவன் நான்” – தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட டொனால்ட் டிரம்ப்

அமைதிக்கான தலைவராக இருப்பதில் பெருமை கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்னை கடந்த 24ஆம் திகதி மோதலாக வெடித்தது.
ஐந்து நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த சண்டையில் இரு தரப்பிலும் 35 பேர் உயிரிழந்தனர். சண்டையைத் தவிர்க்கும் முயற்சியில், 2.6 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த பதற்றமான சூழ்நிலையில், மலேஷியாவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்களுடன் நான் நேரடியாக பேசிய பிறகு, இரு நாடுகளும் சண்டையை நிறுத்தி அமைதிக்குத் திரும்பியுள்ளன. இதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
என் தலையீட்டால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாப்பாகியுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் பல போர்களை நிறுத்தியுள்ளேன். அமைதிக்கான தலைவராக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.”
மேலும், முன்னதாக ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,
“நான் ஜனாதிபதி இல்லாமல் இருந்திருந்தால், இன்று உலகம் இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட ஆறு பெரிய போர்களை சந்தித்து இருப்பது உறுதி” என தெரிவித்தார்.