மெகா ஊழல்: மலேசிய முன்னாள் பிரதமர் மீண்டும் குற்றவாளி எனத் தீர்ப்பு
மலேசியாவின் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் ( 1Malaysia Development Berhad) அரசு நிதியிலிருந்து பல பில்லியன் டொலர் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் குற்றவாளி என இன்று (டிசம்பர் 26, 2025) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் ( 1Malaysia Development Berhad) முதலீட்டு நிறுவனத்திலிருந்து சுமார் 2.3 பில்லியன் ரிங்கிட் பணத்தை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட இரண்டாவது பெரிய வழக்கில், நஜிப் ரசாக் மீதான 4 அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் 21 பணமோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
72 வயதான நஜிப் ரசாக், ஏற்கெனவே மற்றொரு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2022 முதல் சிறையில் உள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் அவர் தாக்கல் செய்த வீட்டுக்காவல் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது இந்த புதிய தீர்ப்பு அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பணம் சவுதி அரசர் வழங்கிய நன்கொடை” என்ற நஜிப்பின் வாதத்தை நீதிபதி செகூரா முழுமையாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.





