இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தீவிரம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்களை ஏமாற்றிய சம்பவம் பற்றி கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டும், போலிப் பிரச்சார நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
பல பிரச்சார விளம்பரங்கள் போலியானவை. இவற்றை வெளியிடுவதற்கு முன்னதாகப் பணியகத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தாலும், பெரும்பாலான விளம்பரங்களுக்கு அத்தகைய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.
எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதப் பிரச்சாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகப் பணியகத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களை வெளியிட்டு சிங்கப்பூர் தொழிற்சாலை ஒன்றில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி 75 இலட்சம் ரூபாய்க்கு மேலான தொகையை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பணியகத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ என்ற இடத்திலுள்ள வீட்டிலிருந்து சந்தேக நபர் கைதானார். இந்த நபருக்கு எதிராக கம்பஹா நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை, பொரளை வை.எம்.பி.ஏ (YMBA) வர்த்தகத் தொகுதியில் யூரோ ஏசியா கன்சல்டிங் (Euro Asia Consulting) என்ற பெயரிலான ஆலோசனை சேவை நிறுவனத்தின் போர்வையில் நடத்தப்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது.
இதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இங்கிருந்து 33 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் அடங்கலாகப் பெருமளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.





