வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (27) சுட்டிக்காட்டினார்.
எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,
“பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.
முகாம்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீள குடியமர்த்துவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறவேண்டும்.
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போதுமான உதவிகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இனியும் காலம் தாழ்த்தாது, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் கவனம் எமது நாடு பக்கம் திரும்பியுள்ள நிலையில் கூடிய விரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், இது தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்களுடன் பேச்சு நடத்திய கடும் நிபந்தனைகளை தளர்த்திக்கொண்டு, புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.” – என்றார் சஜித் பிரேமதாச.





