இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!
இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலில் தற்காலிக தொழில்களில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்றது.
இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் ஊழியச் சந்தையில் தற்காலிக தொழில்களில் அமர்த்துவதற்கு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
2020 பெப்ரவரி 05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய வீட்டுப் பணி, விவசாயம், கட்டுமானம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு மற்றும் துப்பரவாக்கல் சேவைகள், உற்பத்தி போன்ற துறைகளில் காணப்படுகின்ற தொழில்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்குரிய நடைமுறைத் திட்டங்கள் அவ்வப்போது கையொப்பமிடப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலின் வணிக மற்றம் சேவைத் துறைகளிலுள்ள தொழில்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு இஸ்ரேல் அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அத்துறைகளிலுள்ள தொழில்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களை அமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இருதரப்பினருக்கிடையில் தற்போது கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் ‘G’ பணிச்சட்டகத்தின் கீழ் கையொப்பமிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவைக்குத் தெளிவூட்டியுள்ளார்.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.





