அசுர பலத்தில் திமுக கூட்டணி; அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது.
பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையிலான ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’, வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அக்கட்சியின் நிர்வாகிகள், இந்த ஆதரவு முடிவை அறிவித்தனர்.
தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பை, கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் நடந்த மாநாட்டில் அரசியல் கட்சியாக மாற்றிய ஜெகநாத் மிஸ்ரா, தற்போது திமுகவின் அசுர பலமிக்க கூட்டணியில் இணைந்துள்ளார்.
அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், திமுகவின் இந்த விரிவடைந்து வரும் கூட்டணி பலம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் எனப் பலமான கூட்டணியைக் கொண்டுள்ள திமுகவுக்கு, புதிய அமைப்புகளின் ஆதரவு மேலும் வலுசேர்க்கும் எனக் கருதப்படுகிறது.





