திமுகவே தமிழ்நாட்டில் மத அரசியல் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் மத அரசியல் செய்வது திமுக என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் கலையரங்கில் இன்று மாலை இடம்பெற்றது.
இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் அதிகம் விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது. பேருந்துகளின் தரத்தை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
கிறிஸ்துமஸ் விழாவில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் மிகப்பெரிய குற்றம். விரும்பத்தகாத வருத்தப்படக்கூடிய செயல்கள். இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் பிரதமர் டெல்லியில் தேவாலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதை விட நாட்டிற்கு என்ன செய்தியை பிரதமர் கூற முடியும்.
தேர்தலுக்கு 3 மாதங்கள் உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
எஸ்ஐஆர்’ பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 கோடியே 41 இலட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் போது, சில தவறுகள் நடப்பது வழமை.
நியாமானவர்களை சேர்க்க வேண்டும் என்றால் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும். திமுக கடைசி 100 நாட்கள் ஆட்சியில் இருப்பார்கள். அதற்கு பின் தூக்கி எறிப்படுவது உறுதி. இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் மத அரசியல் செய்வது திமுக தான்” என்றார்.





