நெவில் வன்னியாராச்சி மோசடியாக பதவிகளை பெற்றாரா? வெளியான தகவல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்க்காப்பாளரான நெவில் வன்னியாராச்சி, பாதுகாப்புப் பிரிவில் மோசடியாக பதவிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 02.10.2025 ஆம் திகதியன்று 28 மில்லியன் ரூபாய்க்கு மேல் சொத்துக்களைச் சேர்த்தது தொடர்பில் விளக்கமளிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் யார் இந்த நெவில் வன்னியாராச்சி என்று தேடத் தொடங்கியிருந்தனர். அப்போது அவரைப் பற்றிய பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது வரலாற்றுக் கதைகளில், அவர் இராணுவத் தொண்டர் படையில் ஒரு சிப்பாய் என்றும், முன்னொரு காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஓட்டுநராக பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
கோட்டாபய இராணுவத்தை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு முன்பு, நெவில் வன்னியாராச்சியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு நம்பகமான வேலைக்காரன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் பிறகு அவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியாக இருந்ததாகவும், 1989 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினரானபோது சட்டப்பூர்வமாக அவரது பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போதிருந்து, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றி வருகிறார். நெவில் வன்னியாராச்சி தன்னார்வ இராணுவத்தில் உறுப்பினராக இருந்தாலும், அவர் ஒருபோதும் இராணுவ சீருடை அணிவதில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் நெவில்லுக்கு விஐபி பாதுகாப்பில் எந்த பயிற்சியும் இல்லை என்று கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னரே சார்ஜென்ட் நெவிலின் அதிகாரம் அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





