தபால் சேவைக்கு விடை கொடுத்த டென்மார்க்: 400 ஆண்டுகால வரலாறு முடிவு!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதப் பயன்பாடு அருகிப்போன நிலையில், டென்மார்க் தனது 400 வருடகால பாரம்பரியமான தபால் சேவையை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில், டென்மார்க்கில் கடிதங்களின் பாவனை 90 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இதனால் இச்சேவையைத் தொடர்ந்து முன்னெடுப்பதால் பாரிய நஷ்டம் ஏற்படுத்துவதாக அந்நாட்டு அரச தபால் நிறுவனமான போஸ்டனோர்ட் (PostNord ) தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, டென்மார்க் முழுவதும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொது தபால் பெட்டிகளும் (Mailboxes) அகற்றப்படவுள்ளன.
கடிதங்கள் தபாலில் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டாலும், ஒன்லைன் (E-commerce) வர்த்தக வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பார்சல்களை விநியோகிக்கும் பணிகளில் மாத்திரம் போஸ்டனோர்ட் (PostNord ) நிறுவனம் இனி கவனம் செலுத்தும் என்று அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனிப்பட்ட முக்கிய தொடர்பாடல்கள் அனைத்தும் இனி டிஜிட்டல் தளங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படும். தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அல்லது முதியவர்கள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு இந்த மாற்றக் காலத்தில் மாற்று வழிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் முழுமையாகத் தபால் கடிதச் சேவையை நிறுத்தும் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக டென்மார்க் மாறியுள்ளது. தபால் பெட்டிகள் அகற்றப்படுவது அந்நாட்டு மக்களிடையே ஒரு நீண்ட கால பாரம்பரியம் மறைந்து போவது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.





