டிட்வா புயலால் $4.1 பில்லியன் சேதம்- இலங்கைக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட உலக வங்கி
டிட்வா புயல் காரணமாக இலங்கையின் கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் சேத மதிப்பீடு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய விரைவான பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 4% க்கு சமம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக 25 மாவட்டங்களிலும் உள்ள 02 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மிகப்பெரிய சேதங்கள் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் பதிவாகியிருந்தது.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் $689 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வீதிகள், பாலங்கள், ரயில்வே மற்றும் நீர் வழங்கல் அமைப்புகளின் சேத மதிப்பீடு $1.735 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மொத்த சேதத்தின் 42% ஆகும்.
அத்துடன் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் சேதம் $985 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏழ்மை, குறைந்த சேவைகளுக்கான அணுகல் மற்றும் காலநிலை அபாயங்கள் புயலின் தாக்கத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேரிடர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அதிகமாக தாக்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.





